சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

 

1. பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

அ) சமூகமயமாக்கல்

ஆ) பொருளாதார நன்மைகள்

இ) அதிகாரத்துவ ஆளுமை

ஈ) புவியியல்

[விடை: ஈ) புவியியல்]

 

2 பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

அ) பாலின பாகுபாடு

ஆ) சாதி பாகுபாடு

இ) மத பாகுபாடு

ஈ) சமத்துவமின்மை

[விடை: அ) பாலின பாகுபாடு]

 

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

அ) திரைப்படங்கள்

ஆ) விளம்பரங்கள்

இ) தொலைகாட்சி தொடர்கள்

ஈ) இவை அனைத்தும்

[விடை: ஈ) இவை அனைத்தும்]

 

4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்

அ) இந்தியா 2020

ஆ) அக்கினிச்சிறகுகள்

இ) எழுச்சி தீபங்கள்

ஈ) இவை அனைத்தும்

[விடை: ஈ) இவை அனைத்தும்]

 

5. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

அ)1997

ஆ)1996

இ) 1995

ஈ) 1994

[விடை: அ)1997]

 

6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

அ) 1985

ஆ)1986

இ)1987

ஈ) 1988

[விடை: ஈ) 1988]

 

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

அ) செஸ்

ஆ) மல்யுத்தம்

இ) கேரம்

ஈ) டென்னிஸ்

[விடை: இ) கேரம்]

 

8. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

அ) 14 (1)

ஆ) 15 (1)

இ) 16 (1)

ஈ) 17 (1)

[விடை: ஆ) 15 (1)]

 

9. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

அ) 1990

ஆ) 1989

இ) 1988

ஈ) 1987

[விடை: அ) 1990]

 

10. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

அ) நாமக்கல்

ஆ) சேலம்

இ) கன்னியாகுமரி

ஈ) சிவகங்கை

 [விடை: இ) கன்னியாகுமரி]

 

II. பொருத்துக


1. பாரபட்சம் - தீண்டாமை ஒழிப்பு

2. மாறாக் கருத்து உருவாதல் - மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

3.பாகுபாடு - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

4. பிரிவு 14 - தவறான பார்வை அல்லது தவறான கருத்து

5. பிரிவு 17 -  பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்

 

விடைகள்

1. பாரபட்சம் - பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்

2. மாறாக் கருத்து உருவாதல் - தவறான பார்வை அல்லது தவறான கருத்து

3. பாகுபாடு - மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

4. பிரிவு 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

5. பிரிவு 17 -  தீண்டாமை ஒழிப்பு

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

2. 1931 ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.

3.இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த்

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் B.R. அம்பேத்கார்

5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த விகிதம் உள்ள மாவட்டம் தருமபுரி

 

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

 

1. பாரபட்சம் என்றால் என்ன?

• பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது ஆகும்.  

• அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறான முன் முடிவு எடுப்பதாகும். 

• மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.

 

2. ஒத்தக் கருத்து என்றால் என்ன ?  

• ஒத்தக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.

• (எ.கா) பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என முன் முடிவு கொள்வது.

• முன்முடிவு வலுவாக இருக்கும் போது ஒத்தக் கருத்து உருவாகிறது.

 

3. பாகுபாடு என்றால் என்ன ?

• மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும். • சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை , இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

 

4. இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?

இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு மற்றும் பிரிவு 15(1) ஆகியவை சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றன.

 

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

 

1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.

பாரபட்சம் உருவாவதற்கு பொதுவான சமூக காரணிகள்.

• சமூகமயமாக்கல்

• நிர்ணயிக்கப்பட்ட நடத்தை

• பொருளாதார பயன்கள்

• சர்வாதிகார ஆளுமை

• இன மையக் கொள்கை

• கட்டுப்பாடான குழு அமைப்பு

• முரண்பாடுகள்

 

2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு காரணிகளை எழுதுக.

சாதி பாகுபாடு

• இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.

• ஆரம்ப காலங்களில் சமுதாயம் என்பது தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்ததையே வர்ணாசிரமமுறை என அறியப்பட்டது.

• இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.

• இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலினப் பாகுபாடு

• பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.

• எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.

• அநேக பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை .

• இன்னும் சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

 

3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.

• அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.

• தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

• பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.

• மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.  

• வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச்செய்தல்.  

• பல தரப்பட்ட மக்களிடமும் பேசுதல்.  

• சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.

 

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)


1. வகுப்பறையை சிறு குழுக்களாக பிரித்து, பாகுபாடு ஏற்படுத்துவதற்கான காரணங்களைப்பற்றி கலந்துரையாடி, அறிக்கை ஒன்றினை எழுதவும்.

2. பாரபட்சம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்ட நபர்கள் பற்றி தகவல்களை சேகரிக்கவும்.

 

VII. உயர் சிந்தனை வினா

1. இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி.

• மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.

• சாதி ஏற்றத்தாழ்வு, மதச்சமத்துவமின்மை , இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

• இந்தியாவில் நிகழும் பாகுபாடுகளின் மூன்று வகைகள்.

i) சாதி பாகுபாடு

ii) பாலின பாகுபாடு

iii) மத பாகுபாடு


சாதி பாகுபாடு

• இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.

• இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.

• இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.


பாலின பாகுபாடு

• பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.

• எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை .

• ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலின பாகுபாடு ஆகும்.


மத பாகுபாடு

• மதம் சார்ந்த பாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும்.

• சில மக்கள் வேற்று மதத்தவர்களாக இருப்பதால் பொது இடங்களில், மத வழிபாட்டு தலங்களில் நுழைய அனுமதி இல்லை .

• சில மதத்தவர்கள் தங்கள் சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.

 

VII. வாழ்வியல் திறன்

1. உங்கள் கிராமத்தில் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போராடுவீர்.

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்