Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மன நலன் – மன அழுத்தம்

மன அழுத்தத்தின் அறிகுறிகள் - மனித நலன் மற்றும் நோய்கள் - மன நலன் – மன அழுத்தம் | 12th Zoology : Chapter 7 : Human Health and Diseases

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 7 : மனித நலன் மற்றும் நோய்கள்

மன நலன் – மன அழுத்தம்

மன நலன் என்பது சுய மரியாதையுடன் கூடிய நல்ல மன நிலையைக் குறிக்கும்.

மன நலன் – மன அழுத்தம் (Mental health- Depression)

மன நலன் என்பது சுய மரியாதையுடன் கூடிய நல்ல மன நிலையைக் குறிக்கும். சுய மரியாதை என்பது தன்னையே விரும்புவது மற்றும் தான் நம்புவதே சரியென நம்புவதில் உறுதியாக நிற்பது என்று பொருள்படும். நேர்மறையான மனநலன் ஆரோக்கியத்தின் முக்கிய பகுதியாகும். மன நலமுடைய ஒரு நபர் நல்ல ஆளுமையை பிரதிபலிக்கிறார். மன ரீதியாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள மக்களின் நடவடிக்கைகள் எப்பொழுதுமே சமூகத்தின் பாராட்டையும், வெகுமதியையும் பெறுகின்றன. இவர்கள் படைப்பாளர்களாகவும் மற்றவர்களுடன் இணைந்தும் வாழ்கிறார்கள். மன நலன் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது.

மன அழுத்தம் என்பது பொதுவான மன நலக் குறைபாடு ஆகும். இது மக்களிடையே சோர்ந்த மனநிலை, ஆர்வம் அல்லது மகிழ்ச்சி குறைவு குற்ற உணர்வு அல்லது தன் மதிப்பு குறைப்பு, அமைதியற்ற தூக்கம் அல்லது பசியின்மை, குறைந்த ஆற்றல் மற்றும் குறைந்த கவனம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் 

1. தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை இழத்தல். 

2. கவலை 

3. பொதுவாக மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது ஆர்வமிக்கவற்றை அனுபவிக்க இயலாத நிலை. 

உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவியாக இருக்கும். உடற்பயிற்சியானது உடலைத் தூண்டி செரடோனின் (Serotonin) மற்றும் எண்டார்ஃபின்களை (Endorphins) சுரக்கச் செய்கிறது. இந்த நரம்புணர்வு கடத்திகள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. தினசரி வாழ்வில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி நேர்மறையான மனப்பான்மையை உருவாக்குகின்றது.

உடற்பயிற்சி திட்டங்களில் பங்கேற்பது, 

1. சுய மரியாதையை அதிகரிக்கும், 

2. தன்னம்பிக்கையை மேம்படுத்தும், 

3. அதிகார உணர்வை உருவாக்கும், 

4. சமூக தொடர்புகள் மற்றும் உறவு முறைகளை மேம்படுத்தும்.

அனாமதேய குடிகாரர்கள் (Alcoholic anonymous)

அனாமதேய குடிகாரர்கள் என்ற அமைப்பை பல ஆண்டுகளாக வாழ்வில் நம்பிக்கை இழந்து, குடியில் மூழ்கியிருந்த ஒரு தொழில் அதிபரும் ஒரு மருத்துவரும் சேர்ந்து 1935ஆம் ஆண்டு தொடங்கினர். குடியை நிறுத்தவும், மீண்டும் குடிக்காமல் இருக்கவும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட இவர்கள் பிறகு, அனாமதேய குடிகாரர்கள் எனும் அமைப்பை நிறுவி மற்ற குடிகாரர்களுக்கு உதவி புரிந்தனர். அது முதல் 'அனாமதேய குடிகாரர்கள்' எனும் அமைப்பு உலகம் முழுவதும் பரவியது.

உடலில் அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெறும் உறுப்பு மூளை ஆகும். எனவே இது செயல்பட தொடர்ச்சியான ஊட்டச்சத்துகளின் உள்ளேற்றம் அவசியமாகிறது. குறை உணவினால் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க முடியாது. இதனால் கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் தூண்டப்படுகின்றன.


12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 7 : மனித நலன் மற்றும் நோய்கள்