Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும்

வரலாறு - புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும்

மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.

புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும்

மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலகட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்துகிடக்கின்றன. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவையாகும். இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதைபடிவங்கள் (fossil bones) புதைந்துள்ளன.

தொல்மானுடவியல் அறிஞர்களும் (Palaeoanthropologists), தொல்லியல் அறிஞர்களும் (Archaeologists) புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து, மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள். மனிதர்களின் பரிணாமம், தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல்பூர்வமாக கணிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் இச்சான்றுகளின் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.

தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.

தொல்மானுடவியல் (Palaeoanthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து புதைப் படிமங்கள் வழி ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.

புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில், உயிர்கள் தோன்றுவதற்கான நிலை படிப்படியாக உருவானது. தாவர மற்றும் விலங்குகளின் தோற்றத்தைத் தொடர்ந்து மனித உயிர்கள் தோன்றுவதற்கான அடித்தளம் இடப்பட்டது. புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch) என்று பிரிக்கிறார்கள் .

ஒரு பில்லியன் = 100 கோடி

 1 மில்லியன்   = 10 லட்சம்


ஆஸ்ரோலோபித்திசின்கள் என்ற குரங்கினத்தில் இருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது. இன்று அழிந்துபோய்விட்ட இந்த ஆஸ்ரோலோபித்திசின்கள் இனம் மனிதனுக்கு மிக நெருங்கிய உறவுடைய இனமாகும்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்