Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: ஏர் புதிதா?

கு.ப.ராஜகோபாலன் | இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஏர் புதிதா? | 10th Tamil : Chapter 7 : Vithai nel

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

கவிதைப்பேழை: ஏர் புதிதா?

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : கவிதைப்பேழை: ஏர் புதிதா? - கு.ப.ராஜகோபாலன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

கவிதைப் பேழை

ஏர் புதிதா?

-கு.ப.ராஜகோபாலன்



நுழையும்முன்

சங்கத் தமிழரின் திணைவாழ்வு, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர். உழவே தலையான தொழில் என்றாயிற்று. உழவு, தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது. இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபின் 'பொன் ஏர் பூட்டுதல்' என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.


முதல் மழை விழுந்ததும்

மேல்மண் பதமாகிவிட்டது.

வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா!

காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!

பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு

மாட்டைப் பூட்டி

காட்டைக் கீறுவோம்.

ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது,

காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்

கை புதிதா, கார் புதிதா? இல்லை.

நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது!

ஊக்கம் புதிது, உரம் புதிது!

மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து

மண்புரளும், மழை பொழியும்,

நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும்

எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்;

கவலையில்லை!

கிழக்கு வெளுக்குது

பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை.

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

 

நூல் வெளி

'ஏர் புதிதா?' எனும் கவிதை கு.ப.ரா.படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

 

கற்பவை கற்றபின்...

முதல் மழை விழுந்தது - தொடர்ந்து நிகழும் உழவுச் செயல்களை ஏர்புதிதா? கவிதை கொண்டு வரிசைப்படுத்திப் பேசுக.

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்