Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம்

கடியலூர் உருத்திரங் கண்ணனார் | பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம் - கடியலூர் உருத்திரங் கண்ணனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

கவிதைப்பேழை 

கலங்கரை விளக்கம்



நுழையும்முன்

கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம்.


வானம் ஊன்றிய மதலை போல 

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி 

விண்பொர  நிவந்த வேயா மாடத்து 

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி 

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் 

துறை*......

- கடியலூர் உருத்திரங் கண்ணனார்


சொல்லும் பொருளும் 

மதலை தூண்

ஞெகிழி - தீச்சுடர்

அழுவம் கடல்

வேயா மாடம் வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

சென்னி - உச்சி

உரவுநீர் பெருநீர்ப் பரப்பு

கரையும் அழைக்கும்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட  விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறைமுகம்  அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

நூல் வெளி 

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். 

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

தெரிந்து தெளிவோம்

பத்துப்பாட்டு நூல்கள்

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. பெரும்பாணாற்றுப்படை

4. சிறுபாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம்


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்