Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்

தொகுப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: வயலும் வாழ்வும் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : கவிதைப்பேழை: வயலும் வாழ்வும் - தொகுப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

கவிதைப்பேழை

வயலும் வாழ்வும்



நுழையும்முன்

உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம்.


ஓடை எல்லாம் தாண்டிப்போயி - ஏலேலங்கிடி ஏலேலோ 

ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து - ஏலேலங்கிடி ஏலேலோ 

சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி - ஏலேலங்கிடி ஏலேலோ 

சேத்துக்குள்ளே இறங்குறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ


நாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்கிடி ஏலேலோ 

நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ 

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் - ஏலேலங்கிடி ஏலேலோ 

ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ


மடமடன்னு மடைவழியே - ஏலேலங்கிடி ஏலேலோ 

மண்குளிரத் தண்ணீர்பாய - ஏலேலங்கிடி ஏலேலோ 

சாலுசாலாத் தாளுவிட்டு - ஏலேலங்கிடி ஏலேலோ 

நாலுநாலா வளருதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோ


மணிபோலப் பால்பிடித்து - ஏலேலங்கிடி ஏலேலோ 

மனதையெல்லாம் மயக்குதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோ 

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ 

ஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோ


சும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ 

சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் - ஏலேலங்கிடி ஏலேலோ 

கிழக்கத்தி மாடெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ 

கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோ


கால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ 

கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ

தொகுப்பாசிரியர் - கி.வா.ஜகந்நாதன்


சொல்லும் பொருளும் 

குழி - நில அளவைப்பெயர் 

சாண் - நீட்டல் அளவைப்பெயர் 

மணி - முற்றிய நெல்

சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

சீலை - புடவை 

மடை - வயலுக்கு நீர் வரும் வழி 

கழலுதல் - உதிர்தல் 

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது

செந்நெல்லென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான

தென்மதுரை

(நாட்டுப்புறப்பாடல்)

பாடலின் பொருள் 

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர். 

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

நூல் வெளி 

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.



7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்