Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மரக்கட்டை - இரண்டாம் நிலை வளர்ச்சி

11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி

மரக்கட்டை - இரண்டாம் நிலை வளர்ச்சி

மரம் அறுக்கும் செயல்முறை மூலம் மரத்துண்டுகளிலிருந்து வெட்டு மரம் பெறப்படுகிறது.

மரக்கட்டை (Timber)

மரம் அறுக்கும் செயல்முறை மூலம் மரத்துண்டுகளிலிருந்து வெட்டு மரம் பெறப்படுகிறது. மரம் அறுத்தலில் பல்வேறு முறைகள் உள்ளன. அவைகளில் ரம்ப அறுவை முறையே மிகவும் பொதுவானது. மரக்கட்டை தச்சு வேலை மற்றும் வீடு கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது. மரத்தின் தரத்தை உயர்த்தக் கட்டை பதப்படுத்தம் (உலர்வித்தல்) செய்யப்படுகிறது. மரக்கட்டை வளி மண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வளியைத் தேக்கி ஒதுக்கக்கூடிய மிக முக்கியமான திசுவாகும். இவ்வாறு கார்பன் ஒதுக்கம் செய்வதால் உலக வெப்பமயமாதல் (global warming) குறைகிறது.



1. கட்டை பதப்பாடு (Seasoning of wood)

இது கட்டையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறையாகும். இது இரண்டு வகைப்படும்.

1. காற்று பதப்படுத்தம் (Air Seasoning)

சூரிய வெப்பத்தால் இயற்கையான முறையில் செயற்கையான சூடு பயன்படுத்தாமல் துண்டாக்கப்பட்ட வெட்டு மரத் துண்டங்களைத் திறந்த வெளி பகுதியில் அடுக்கி இயற்கையாகவும், மெதுவாகவும் ஈரப்பதம் நீக்கப்படுகிறது. இந்தச் செயல்முறை வெட்டு மரத்திற்கு வலிமை, எரிதிறன், குறைச் சிதைவு போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது.



2. சூட்டடுப்பு பதப்படுத்தம் (Kiln Seasoning)

செயற்கையான மூடப்பட்ட முறையில் ஈரப்பதத்தை நீக்கும் முறையாகும். வெட்டு மரத் துண்டங்கள் மூடப்பட்ட நீராவி வெப்பமூட்டி அறையில் வைத்து விசிறிகளின் மூலம் காற்றைச் சுழலச் செய்து உள்ளே செலுத்துவதன் மூலம் ஈரப்பதம் ஒரே சீராக, வேகமாக, முழுவதுமாக, நீக்கப்படுகிறது.


செயல்பாடு மரத் துகள்கள், சீவல்கள், மர மாவின் பயன்பாடுகளைப் பட்டியிலிடுக.


2. கட்டையின் நயக்கோடு, நயம், உருவம் (Grain, Texture, and Figure of Wood)

நயக்கோடு (Grain): உருவ அமைவு முறையைக் குறிக்கிறது. நயம் (Texture): கட்டையின் அமைப்பையும் தரத்தையும் குறிக்கும். உருவம் (Figure): மரத்தை நீள்வட்டுத் திசையில் வெட்டும் பொழுது உள் அணுத்துகள்களில் ஏற்படுத்தப்பட்ட பாங்கினைக் குறிக்கிறது. மரத்தை அறுக்கும் திசை, உள் அணுத்துகள் கட்டமைப்பு மற்றும் நயம் ஆகியவற்றைப் பொருத்து மரத்தின் உருவம் வெளிப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?

ஒட்டுப் பலகை இது 3 முதல் 9 மெல்லிய அடுக்குகளான மர ஒட்டு மென் பலகைகளைப் பசையால் இணைத்துத் தயாரிக்கப்படுகிறது இது தரை, சுவர், பொய்க்கூரை, வாகன உட்பகுதி போன்றவை செய்யப் பயன்படுகிறது.

செயல்பாடு 

சில ஒட்டு மரத் துண்டுகள் சேகரி, அதன் அடுக்குகளைக் கூர்ந்தாய்ந்து, எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை உங்களுக்குள் விவாதித்துக் கொள்ளவும்.


11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி