Naneri | பருவம் 2 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் - நன்னெறி | 4th Tamil : Term 2 Chapter 4 : சிவப்பிரகாச சுவாமிகள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : நன்னெறி

நன்னெறி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : நன்னெறி - Naneri

4. நன்னெறி



இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்

அதிர்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென்

கதிர்வரவால் பொங்கும் கடல்

- சிவப்பிரகாச சுவாமிகள்


 

சொல் பொருள்

இன்சொல் - இனிமையான சொல், இருநீர் வியனுலகம் கடலால் சூழப்பட்ட பரந்த உலகம், வன்சொல் - கடுமையான சொல், அதிர்வளை - ஒலிக்கின்ற வளையல், அழல் கதிர் கதிரவனின் வெப்பக் கதிர்கள், தண்ணென் கதிர் - குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி

பாடல் பொருள்

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

நூல் குறிப்பு

நீதிநூல்களுள் ஒன்று நன்னெறி. இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமைமூலம், ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது, இந்நூலின் சிறப்பாகும்.

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 4 : நன்னெறி