Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பயிற்சி வினா விடை | 7th Social Science : History : Term 3 Unit 1 : New Religious Ideas and Movements

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு 1 : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -1: புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்: புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

பயிற்சி


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்? 

அ) பொய்கை ஆழ்வார் -

ஆ) பெரியாழ்வார் 

இ) நம்மாழ்வார்

ஈ) ஆண்டாள் 

விடை: ஆ) பெரியாழ்வார் 


2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்? 

அ) இராமானுஜர்

ஆ) இராமாநந்தர் 

இ) நம்மாழ்வார்

ஈ) ஆதி சங்கரர் 

விடை: ஈ) ஆதி சங்கரர் 


3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்? 

அ) வல்லபாச்சாரியார்

ஆ) இராமானுஜர் 

இ) இராமாநந்தர்

ஈ) சூர்தாஸ் 

விடை: இ) இராமாநந்தர் 


4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்? 

அ) மொய்னுதீன் சிஸ்டி

ஆ) சுரவார்டி 

இ) அமீர் குஸ்ரு

ஈ) நிஜாமுதின் அவுலியா

விடை: அ) மொய்னுதீன் சிஸ்டி 


5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்? 

அ) லேனா

ஆ) குரு அமீர் சிங் 

இ) குரு நானக்

ஈ) குரு கோவிந் சிங் 

விடை: இ) குரு நானக் 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் .........

விடை: விஷ்ணு சித்தர் 

2. சீக்கியர்களின் புனிதநூல் ........ ஆகும்.

விடை: குரு கிரந்சாகிப் 

3. மீராபாய் .......... என்பாரின் சீடராவார்

விடை: ரவிதாஸ் 

4. ...... என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது. 

விடை: இராமானுஜர் 

5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ....... என்ற இடத்தில் அமைந்துள்ளது. 

விடை: கர்தார்பூர்


III. பொருத்துக

1. பாகல்  - அ. கபீர்

2. இராமசரிதமானஸ் – ஆ. இராமானுஜர்

3. ஸ்ரீவைஷ்ணவம் -  இ. அப்துல் வகித் அபுநஜிப்

4. கிரந்தவளி - ஈ. குரு கோவிந் சிங்

5. சுரவார்டி – உ. துளசிதாசர்

விடைகள் :

1. பாகல்  - ஈ குரு கோவிந் சிங் 

2. இராமசரிதமானஸ் – உ. துளசிதாசர்

3. ஸ்ரீவைஷ்ணவம் -  ஆ. இராமானுஜர்

4. கிரந்தவளி - அ. கபீர்

5. சுரவார்டி – இ. அப்துல் வகித் அபுநஜிப்


IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஆண்டாள் - திருவில்லிபுத்தூர்

துக்காராம் -- வங்காளம் 

சைதன்யதேவா - மகாராஷ்டிரா 

பிரம்ம சூத்திரம் - வல்லபாச்சாரியார் 

குருத்வாராக்கள் - சீக்கியர்கள் 

விடை: 1. ஆண்டாள் - திருவில்லிபுத்தூர் 

5. குருத்வாராக்கள் - சீக்கியர்கள்


2. கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது. 

காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங். 

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல. 

ஆ)காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது. 

இ) கூற்று சரி, காரணம் தவறு. 

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. 

விடை: இ) கூற்று சரி, காரணம் தவறு. 


3. பொருந்தாததைக் கண்டுபிடி. 

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.

விடை: ஆண்டாள் 


V. சரியா? தவறா? 

இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.

விடை : சரி 

2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.

விடை : சரி 

3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.

விடை : சரி 

4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.

விடை : சரி 

5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடை : சரி 


VI. குறுகிய விடையளி 

1. திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?

திருமுறை: 

* திருமுறை சைவப் புனித நூல்களின் அடிப்படை. 

* 63 நாயன்மார்களில் ஒருவரான நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) திருமுறையைத் தொகுத்தார் (நாயன்மார்களின் பாடல்கள் தொகுப்பு).

* திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது (11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பி. 12வது நூல் சேக்கிழார் - பெரியபுராணம்) 


2. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்? 

நாயன்மார்கள்:

* நாயன்மார்கள் 63 பேராவர் (சைவ அடியார்கள்) 

* ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மும்மூர்த்திகள்) முக்கியமானவர்கள் 


3. சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்? 

சீக்கிய மதம்: 

* குருநானக்கின் போதனைகளே புதிதாக நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது. 

* 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் நிறுவினார்.

* நானக் வேதச் சடங்குகள், சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது வெறுப்புக் கொண்டிருந்தார். 


4. பண்டரிபுரம் விதோபா கோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்? 

துக்காராமும் விதோபா கோவிலும்: 

* துக்காராம் (கவிஞர், திருத்தொண்டர் - மகாராஷ்டிரா) அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே நன்கு அறியப்பட்டிருந்தார். 

* அவருடைய பாடல்களான அபங்கா (அல்லது) கீர்த்தனைகள் விதோபா குறித்து இயற்றப்பட்டது (விஷ்ணுவின் அவதாரம்). 

* விதோபா கோவில் பந்தர்பூரில் உள்ளது. (சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா) 


5. கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து. 

கபீரின் சமயக்கருத்துக்கள்: 

* பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. ஆனால் கபீர் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினார். 

* கபீர் சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.


VII. விரிவான விடையளி

1. தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரது பங்களிப்பினைப் பற்றிக் கூறு. 

பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரின் பங்களிப்பு: 

* கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கங்களை நிறுவிய சான்றோர்கள் கருதினர். 

* கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தென்னிந்தியாவில் தொடங்கிற்று. ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களைச் சுமந்து செல்லுதல், கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும்.

* தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது. 

* ஆழ்வார்கள் (வைணவ பக்தி அடியார்கள்), நாயன்மார்கள் (சிவனை வழிபடும் சைவ அடியார்கள்), ஆதிசங்கரர் (அத்வைதம்), இராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) ஆகியோர் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய சான்றோர் ஆவர். 

* இராமாநந்தர், வல்லபாச்சாரியார், சூர்தாஸ், மீராபாய், சைதன்யதேவா, துளசிதாசர் மற்றும் துக்காராம் ஆகியோர் வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பரவக் காரணமான சான்றோர்கள். 


2. சூபியிஸம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்விதம் தடம் பதித்தது? 

சூபியிஸம் மற்றும் இந்தியாவில் அதன் தடம் பதிப்பு: 

சூபியிஸம்: 

* சூபி எனும் சொல் சுப்' என்பதிலிருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர். 

* சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது இந்து, பௌத்த சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. 

இந்தியாவில் தடம் பதித்தல்: 

* பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானிய ஆட்சியின்போது சூபியிஸம் முக்கியத்துவம் பெற்றது. 

* இந்தியக் கருத்தாக்கங்களான யோகப்பயிற்சி, தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்டது. 

* மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். நிஜாமுதீன் அவுலியா டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களால் பின்பற்றப்பட்டார். 

* பிர்தௌசி அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பீகாரில் மட்டுமே காணப்பட்டன. அது சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். (சுரவார்டி அமைப்பு தோற்றுவித்தவர் அப்துல் வகித் அபு நஜிப் எனும் ஈரானிய சூபி). 


3. இந்திய சமூகத்தில் பக்தி இயக்கம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

இந்திய சமூகத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்: 

* இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது. 

* பக்தி இயக்கச் சான்றோர்களால் இஸ்லாமியத் தத்துவக்கூறுகள் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன (தத்துவக் கூறுகள் கடவுள் ஒருமைப்பாடு மற்றும் உலக சகோதரத்துவம்). 

* சாமானிய மக்களின் மொழியைப் பயன்படுத்தி பக்தி இயக்கம் சாமானிய மக்களின இயக்கமானது. 

* இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாய் அமைந்தது.

* இந்து அரசுகளின் அரசர்கள் சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு நல்கினார். 

* தமிழ் மட்டுமே பக்தி இயக்கக் காலப் பகுதியில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி. பக்தி இயக்கக் கோட்பாடுகளால் அன்றாட வாழ்க்கையைச் சித்தரித்த தமிழ் இலக்கியம், சமயங்களுக்கும், சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. 

* சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.


VIII. உயர்சிந்தனை வினா 

1. இஸ்லாத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தது என்பதை ஆராய்க.

வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தல்: 

* இந்து. இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. 

* ஹரிதாசரின் கூற்று “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே”. 

* பிற சமய கடுந்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு, ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர். 

* ஆதி சங்கரர் பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாது வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார். 

* சமூக, சமத்துவக் கருத்துகளைப் பரப்பிய இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுபாடுகளை கண்டனம் செய்தார். 

* கபீர், குருநானக் (புதிய சமயப்பிரிவுகள்) மற்றும் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோர் சிறப்பாய் செயல்பட்டனர். 

* இராமாநந்தர், வல்லபாச்சாரியார் (தெலுங்கு), சூர்தாஸ் (ஆக்ரா), மீராபாய் (மேவார்), துளசிதாசர், துக்காராம் ஆகியோரும் பக்தி இயக்கத்தைப் பரப்பியதன் மூலம் வேத இந்து மதத்தைப் பாதுகாத்தனர்.


IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. தமிழகத்தின் பக்தி இயக்கப் பெரியோர் வாழ்ந்த பகுதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் செல்க.


7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு 1 : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்