Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | மைய வங்கியின் பணிகள்

வங்கியியல் - மைய வங்கியின் பணிகள் | 12th Economics : Chapter 6 : Banking

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்

மைய வங்கியின் பணிகள்

இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. இது பணவியல் கொள்கை மூலம், பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது.

மைய வங்கியின் பணிகள் (Functions of Central Bank)

ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. இது பணவியல் கொள்கை மூலம், பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934ன்படி, ஏப்ரல்1-ஆம் தேதி 1935 முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது. துவக்கத்தில், வங்கியின் மூலதனம் ₹100 மதிப்பு கொண்ட சம பங்குகளாக பிரிக்கப்பட்டு தனியார் வசம் இருந்தன. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, குறிப்பாக ஜனவரி 1, 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது. பின்வருவன இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் ஆகும்.


1. பண அதிகார அமைப்பு (Monetary Authority)

இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்து நிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் வங்கியமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றை செய்கிறது. 

2. காகிதப்பண வெளியீடு

இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப்பணத்தைத் தவிர அனைத்து வகையான காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும். மேலும், பண மற்றும் கடன் அளவுகளை இது மேலாண்மை செய்கிறது. புழக்கத்தில் உள்ள போலியான பணத்தினை கட்டுப்படுத்தும் பொறுப்பும் மைய வங்கிக்கு உண்டு.

3. வங்கி உரிமங்கள் வழங்குபவர்

வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22ன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.

4. அரசுக்கான வங்கி

இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகால கடன்களை தருகிறது. இது அரசு கடன்கள், அரசு கடன் தொடாபான சேவைகள், அரசு கடன் பத்திரங்கள்களை உருவாக்கி விற்பனை செய்வது ஆகிய பணிகளைச் செய்கின்றது. மேலும், அரசுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.


இந்திய ரிசர்வ் வங்கி

வரலாறு

• 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம்  ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது. 

• ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.

• 1937 ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு

மாற்றப்பட்டது.

• ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார்

நிர்வாகம்

• மைய வங்கி/மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர்

• கடைசி நிலைக் கடன் ஈவோன்

• ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் மற்றும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

பணிகள் 

• காகிதப்பணம் வெளியிடுதல்

• அரசின் வங்கியாகச் செயல்படுதல் (அரசிற்கான நிதி வருவாயைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அரசின் செலவினங்களுக்குப் பணம் வழங்குதல்)

• இந்திய வங்கி அமைப்புக்களை நெறிப்படுத்துதல்

• அந்நியச் செலாவணியின் பாதுகாவலன்

• கடன் அளிப்பை நெறிப்படுத்துதல்.

18ம் நூற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது. தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கிகள் முதலில் காகிதப் பணத்தை அச்சடித்தது.

ஷெர்ஷா சூரி (Sher shah suri) என்பவரால் ₹1க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது. இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் (முன்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற 15 மொழிகளிலும்)


5. வங்கிகளின் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். இது வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கிறது, அவைகளின் வைப்புக்களை ஏற்கிறது, மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்கிறது. அதனால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.

6. கடைநிலைக் கடன் ஈவோன்

வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும்பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலிருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.

7. தீர்வாக செயல்படுகின்றது

வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைகளை தனது14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிவர்த்தனைக் கருவிகளை பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.

8. அந்நிய செலாவணி பாதுகாவலன்

இது அந்நிய செலாவணி இருப்புக்களை பாதுகாக்கும் பணியினை செய்கிறது. 1999ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act - FEMA) சட்டத்தின்படி இது அந்நிய செலாவணி மேலாண்மையும் நிர்வகிப்பினையும் மேற்கொள்கிறது. அந்நிய பணத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை நிலைப்படுத்துவதற்காக வெளிநாட்டு பணங்களை அவ்வப்பொழுது வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

9. பொருளாதாரத்தை நெறிப்படுத்துகிறது

பணவியல் கொள்கையை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை நெறிப்படுத்தி விரும்பத்தகுந்த பாதையில் கொண்டு செல்கிறது. மேலும், தேசிய வருவாய், வேலைவாய்ப்பு, செலவு, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கிய குறியீடுகளை தொடர்ந்து கண்காணித்து நெறிப்படுத்துகிறது.

10. அரசு கடன் பத்திரங்களை நிர்வகிக்கிறது

குறிப்பிட்ட சதவிகிதத்திலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அரசின் கடன்பத்திரங்களாக கொண்டுள்ள நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து நிர்வகிக்கின்றது.

11. செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதில் நெறியாளாராகவும், மேலாளராகவும் செயல்படுகிறது

2007-ஆம் ஆண்டு செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டம் (The Payment and Settlement System Act. 2007 – PSS Act) இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கி பாதுகாப்பான மற்றும் திறமையான செலுத்துதல் மற்றும் தீர்வுகளை மேற்பார்வையிடுவதன் மூலம் மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

12. மேம்பாட்டு பணி

இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த வங்கி அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் மூலம் சிறந்த உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றது. தேசிய குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பரந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்கின்றது. இது மேலும், நாட்டின் நிதிக்கட்டமைப்பினை ஏற்படுத்தும் நிறுவனங்களையும் அமைக்கின்றது. இதனுடன்கூட, நாட்டில் நிதிச் சேவைகள் மற்றும் நிதிக் கல்வியறிவு ஆகியவற்றை விரிவாக்கும் பணியினையும் செய்கின்றது. இதற்கான கல்வி, ஆய்வு நிறுவனங்களையும் நடத்துகின்றது.

13. பணவியல் மற்றும் இதர தகவல்களை வெளியிடுகிறது

பணம், வங்கி மற்றும் முக்கிய பொருளாதாரப் புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. மேலும், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை திறனாய்கிறது. புள்ளிவிவரங்களை திரட்டி, வரிசைப்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு (Reserve Bank of India Bulletin) மூலம் மாத, காலாண்டு, ஆண்டு விவரங்களை வெளியிடுகிறது.

14. பரிவர்த்தனை மேலாளர் மற்றும் நெறியாளார்

சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund) இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி விளங்குகிறது. நிதியத்திலிருந்து பெறப்படும் அந்நிய செலாவணியை மேலாண்மை செய்வதும், அதிகாரம் அளிக்கப்பட்ட அந்நிய செலாவணி விற்பனையாளர்களான வணிக வங்கிகளை நெறிப்படுத்தும் செயலையும் இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது.

15. வங்கி குறைதீர்ப்பாய திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி 1995ல் வங்கி குறைதீர்ப்பாயத்தினை (Banking Ombudsman) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு வரும் அனைத்து புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளை வங்கி குறை தீர்ப்பாயம் களைகின்றது. இணையவழியில் வரும் புகார்கள் உட்பட அனைத்து வழிகளில் வரும் புகார்களையும் இந்த குறை தீர்ப்பாயம் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது.

16. இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியம்

வங்கிகளின் திறனை அளவிடும் விதமாக உலகளவில் ஏற்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் (அடிப்படையில்) இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியத்ததை (Banking Codes and Standards Board of India - BCSBI) அமைத்துள்ளது.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்