Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | வடமேற்குப் படையெடுப்புகள் (1585-1605)

முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வடமேற்குப் படையெடுப்புகள் (1585-1605) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -2 : முகலாயப் பேரரசு

வடமேற்குப் படையெடுப்புகள் (1585-1605)

நாடுகளைக் கைப்பற்றும் நோக்கில் அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகளில் முக்கியமானவை வடமேற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்.

வடமேற்குப் படையெடுப்புகள்

நாடுகளைக் கைப்பற்றும் நோக்கில் அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகளில் முக்கியமானவை வடமேற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம் அக்பர் காண்டகார், காஷ்மீர், காபூல் ஆகியவற்றைப் பேரரசுடன் இணைத்தார். தக்காணத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள் பீரார், காண்டேஷ், அகமது நகரின் சில பகுதிகள் இணைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. வடக்கே காஷ்மீர், தெற்கே கோதாவரி, மேற்கே காண்டகார், கிழக்கே வங்காளம் ஆகியவற்றுக்கிடையே முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது. 

1605 இல் அக்பர் இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அக்பரின் கொள்கை

வாள் வலிமையின் மூலம் பெறப்படும் ஆதாயங்களைக் காட்டிலும் அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்திருந்தார். எனவே இந்து பிரபுக்கள் மற்றும் இந்து மக்களின் திரளின் நம்பிக்கையைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும், இந்துப் பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளையும் நீக்கினார். ரஜபுத்திர உயர்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், தன் மகனுக்கும் ரஜபுத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். பேரரசின் உயர் பதவிகளில் ரஜபுத்திரப் பிரபுக்களைப் பணியமர்த்தினார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டார்.

அக்பர் அனைத்து மதங்களைச் சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார். சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தனர். குரு ராம்தாசுக்கு அமிர்தசரசில் அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில்தான் பின்னர் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது. புதிய நகரான பதேப்பூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பெற்ற இபாதத்கானா என்னும் மண்டபத்தில் அனைத்து மதங்களின் அறிஞர்களும் ஒன்றுகூடி உரையாடினர்.


பண்பாட்டுப் பங்களிப்பு

அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துகளையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார். அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் -இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்தனர். பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென் ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.



7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -2 : முகலாயப் பேரரசு