Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: இடையீடு

சி.மணி | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: இடையீடு | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

செய்யுள்: இடையீடு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : செய்யுள்: இடையீடு - சி.மணி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

கல்வி – ச 

இடையீடு

- சி. மணி



நுழையும்முன்

தேடலை விரிவாக்குவது கல்வி. சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையாய் நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்க வல்லது கல்வி. கற்பிப்பதும் கற்பதும் ஒருங்கிணைதல் கற்றலில் வெற்றியைத் தரும். கொடுக்கின்ற மனதின் செய்திகளை வாங்குகின்ற மனம் அப்படியே ஏற்பதில்லை. கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு. எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.


சொல்ல விரும்பிய தெல்லாம்

சொல்லில் வருவதில்லை


எத்தனையோ மாற்றங்கள் 

குறிதவறிய ஏமாற்றங்கள் 

மனம்புழுங்கப் பலவுண்டு


குதிரை வரையக் குதிரையே 

வராது; கழுதையும் வரலாம். 

இரண்டும் கலக்கலாம்.


எலிக்குப் பொறிவைத்தால் 

விரலும் விழுவதுண்டு. 

நீர்தேடி அலையும்போது 

இளநீரும் கிடைக்கும்.


என்றோ ஒருமுறை 

வானுக்கு விளக்கடிக்கும் 

வால் மீனாக 

சொல்ல வந்தது சொல்லில் 

வந்தாலும், கேட்பதில் சிக்கல்


கனியின் இனிமை 

கனியில் மட்டுமில்லை, 

சுவைப்போன் பசியை, 

சுவைமுடிச்சைச் சார்ந்தது.


எண்ணம்

வெளியீடு 

கேட்டல் 

இம்மூன்றும் எப்போதும் 

ஒன்றல்ல ஒன்றென்றால் 

மூன்றான காலம்போல் ஒன்று


நூல்வெளி

இடையீடு கவிதை, சி. மணியின் (சி. பழனிச்சாமி) 'இதுவரை' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளைக்கொண்டு அமைந்தது. அதனால் பன்முகப் பொருள் கொண்டது. இக்கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது. 1959ஆம் ஆண்டுமுதல் 'எழுத்து' இதழில் இவரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் 'நடை' என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய 'யாப்பும் கவிதையும்' என்னும் நூலும், 'வரும் போகும்', ஒளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. ஆங்கிலப்பேராசிரியரான இவர் தாவோ தே ஜிங் எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் புதுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்; இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்; விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்; வே. மாலி, செல்வம் என்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.


12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை