Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | பாடல் : கல்வியே தெய்வம்

பாரதிசுகுமாரன் | பருவம் 3 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : கல்வியே தெய்வம் | 5th Tamil : Term 3 Chapter 2 : Arm, thathuvam, sindhanai

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை

பாடல் : கல்வியே தெய்வம்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை : பாடல் : கல்வியே தெய்வம் - பாரதிசுகுமாரன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

பாடல்

அறம் / தத்துவம் / சிந்தனை

 

கற்றல் நோக்கங்கள்

கல்வியின் இன்றியமையாமையை அறிந்து கொள்ளுதல்

கல்வியறிவு பரந்துபட்ட விரிசிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதை உணர்தல்

உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்

நேர்மையாக வாழ்தலின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல்

மயங்கொலிச்சொற்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்துதல்

 

கல்வியே தெய்வம்


அன்னையும் தந்தையும் தெய்வம் - இதை

அறிந்திட வேண்டும் நீயும்

கண்ணெனும் கல்வியும் தெய்வம் - இதைக்

கருத்தினில் கொள்வாய் நீயும்

பொன்னையும் மண்ணையும் விஞ்சும் - அந்தப்

புகழும் நம்மைக் கொஞ்சும்

நன்மையும் மென்மையும் தோன்றும் - நல

நயமதும் நம்மை அண்டும்

கல்வியைக் கற்றிட வேண்டும் - அதைக்

கசடறக் கற்றிட வேண்டும்

வல்லமை பெற்றிட வேண்டும் - நல்

வளமதை எட்டிட வேண்டும்

கற்றிடக் கற்றிட யாவும் - நல்

கணக்கென நெஞ்சில் கூடும்.

வெற்றிகள் ஆயிரம் சேரும் - புகழ்

வெளிச்சமும் மேனியில் ஊறும்

விண்ணையும் அளந்திட வைக்கும் - நம்மை

விடியலாய் எழுந்திட வைக்கும்

திண்மையும் வசப்பட வைக்கும் - மனதில்

தெளிவினைச் செழித்திட வைக்கும்

- பாரதிக்குமாரன்

 

சொல்பொருள்

விஞ்சும் - மிகும்

கசடற – குற்றம் நீங்க

திண்மை - வலிமை

அண்டும் - நெருங்கும்

ஊறும் - சுரக்கும்

செழித்திட - தழைத்திட

பாடல் பொருள்

இப்பாடல், கல்வி குறித்த விரிசிந்தனையைத் தருகிறது. அன்னை, தந்தை இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும். பொன்னையும் மண்ணையும்விட மேலானாது கல்வி. நமக்குப் புகழையும் தந்து நிற்கும், கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கிவரும். ஆகையால், கல்வியைக் குற்றம் நீங்க கற்றிட வேண்டும். ஆற்றலையும் நல்ல வளத்தையும் நாம் பெறவேண்டும். நாள்தோறும் கற்றிட, கற்பன யாவும் மனக்கணக்கைப்போல் நெஞ்சில் பதியும். வெற்றி கிட்டும். புகழ் தோன்றும். விண்ணையும் அளக்கச் செய்யும், நம்மை விடியலாய் எழச் செய்யும். நம்மிடத்தே வலிமையையும் சேர்க்கும், மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச்செய்யும்,

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை