Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | செய்யுள் : திருக்குறள் - பண்புடைமை

பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் : திருக்குறள் - பண்புடைமை | 5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு

செய்யுள் : திருக்குறள் - பண்புடைமை

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு : செய்யுள் : திருக்குறள் - பண்புடைமை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

செய்யுள்

நாகரிகம் / பண்பாடு

 

கற்றல் நோக்கங்கள்

திருக்குறளின் மேன்மையை அறிந்துகொள்ளுதல்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்துகொள்ளுதல்

தமிழர்கள் வீரக்கலைகளுக்கு அளித்த முதன்மையைப் புரிந்துகொள்ளுதல்

தமிழர் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்துத் தெரிந்துகொள்ளுதல்

உரையாடல்களிலும் தொடர்களிலும் இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துதல்

 

திருக்குறள்

 

பண்புடைமை

1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு

பொருள் : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்கு உரிய நல்ல வழியாகும்.

சொல்பொருள் : ஆன்ற - உயர்ந்த

 

2. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு

பொருள் : நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சொல்பொருள் : நயன் - நேர்மை; நன்றி - நன்மை

 

3. பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்

பொருள் : நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்.

சொல்பொருள் : புக்கு - புகுந்து; மாய்வது அழிவது

 

4. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள் : அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவரே ஆவர்.

சொல்பொருள் :  அரம் வாளைக் கூர்மையாக்கும் கருவி; போல்வர் - போன்றவர்

 

5. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந் தற்று

பொருள் : பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றதாகும்.

சொல்பொருள் : பெருஞ்செல்வம் - மிகுந்த செல்வம்; நன்பால் - நல்ல பால்

 

நூல்குறிப்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, திருக்குறள். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளை உடையது. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த அறநெறிக் கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது. இந்நூலை இயற்றியவர், திருவள்ளுவர்.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு