Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: விருந்தினர் இல்லம்

ஜலாலுததீன் ரூமி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: விருந்தினர் இல்லம் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

செய்யுள்: விருந்தினர் இல்லம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : செய்யுள்: விருந்தினர் இல்லம் - ஜலாலுததீன் ரூமி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

பண்பாடு – ங

விருந்தினர் இல்லம்

- ஜலாலுத்தீன் ரூமி



நுழையும்முன்

இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வேறுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து வேண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று. எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும். எந்த மொழியில் இருந்தாலும் நல்ல இலக்கியங்கள் இப்பண்பாட்டை வலியுறுத்துகின்றன.



இந்த மனித இருப்பு 

ஒரு விருந்தினர் இல்லம். 

ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு.


ஓர் ஆனந்தம் 

சற்று மனச்சோர்வு 

சிறிது அற்பத்தனம் 

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு- 

எதிர்பாராத விருந்தாளிகளாக 

அவ்வப்போது வந்துசெல்லும்.


எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு!

துக்கங்களின் கூட்டமாக அவை

இருந்து உனது வீட்டைத் துப்புரவாக 

வெறுமைப்படுத்தும் போதும், 

ஒவ்வொரு விருந்தினரையும் 

கௌரவமாக நடத்து. 

புதியதோர் உவகைக்காக


அவை உன்னை

தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும்.


வக்கிரம்

அவமானம்

வஞ்சனை

இவற்றை வாயிலுக்கே சென்று

இன்முகத்துடன் 

வரவேற்பாயாக.


வருபவர் எவராயினும் 

நன்றி செலுத்து.

ஏனெனில் ஒவ்வொருவரும் 

ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள்.

தொலைதூரத்திற்கு

அப்பாலிருந்து.


நூல்வெளி

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில் 'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி. (பொ.ஆ.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான மஸ்னவி' (Masnavi) 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், 'திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி' (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும்.


12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள