Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | புஷ்யபூதிகள்

ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி - வரலாறு - புஷ்யபூதிகள் | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

புஷ்யபூதிகள்

வர்த்தனவம்சத்தை நிறுவியவர் புஷ்யபூதி. அவர் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

புஷ்யபூதிகள்

வர்த்தனவம்சத்தை நிறுவியவர் புஷ்யபூதி. அவர் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். குப்தப் பேரரசர்களின் கீழ் படைத் தளபதியாக இருந்த அவர் குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தார். பிரபாகர வர்த்தனர் (பொ.. 580-605) ஆட்சியில் அமர்ந்த பின்னர் புஷ்யபூதிகளின் குடும்பம் வலிமை மிக்கதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாறியது. பிரபாகர வர்த்தனர் கூர்ஜரர்கள், ஹூணர்கள் ஆகியோருக்கு எதிராகப் போரிட்டுத் தன் ஆட்சியை மாளவம் மற்றும் குஜராத் வரை நிறுவினார். அவர் கன்னோசியை (தற்போதைய கான்பூருக்கு அருகிலுள்ள) ஆண்ட மௌகாரி வம்சத்தைச் சேர்ந்த கிரகவர்மனுக்குத் தன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொடுத்து கன்னோசியை தன் கூட்டாளியாக்கிக் கொண்டார். ஒரு பேரரசை உருவாக்கும் பிரபாகர வர்த்தனரின் கனவு அவரது இளைய மகனான ஹர்ஷவர்த்தனரால் நிறைவேறியது.

பிரபாகர வர்த்தனரின் மூத்த மகனான ராஜ்ய வர்த்தனர் (பொ.. 605-606); தன் தந்தை இறந்த பிறகு ஆட்சியில் அமர்ந்தார். வங்காளத்தை ஆண்டு வந்த கௌட அரசன் சசாங்கனால் இராஜ்ய வர்த்தனர் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். இதன் விளைவாக அவரது தம்பி ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார். ஹர்ஷர் அண்டையிலிருந்த சிற்றரசுகளின் பலவீனத்தை அறிந்து கொண்டு அவற்றின் மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டார். ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார். தானேஸ்வரம் வடமேற்கிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு ஏதுவாக அமைந்திருந்தது. கன்னோசி மேற்கு கங்கை சமவெளியில் செழிப்பான வேளாண் பகுதியில் அமைந்திருந்தது.

கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:

கன்னோசியின் (மௌகரி அரசின் தலைநகர்) முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரையின்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தனர். தயக்கம் காட்டியஹர்ஷர் அவலோகிதேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாதித்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தானேஸ்வரமும் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன. பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரைக் கன்னோசிக்கு இடம் மாற்றிக் கொண்டார்

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி