Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆழ்வோம்


கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக. 

1. காட்டு வளமே நாட்டு வளம்! 

அனைவருக்கும் வணக்கம்!

காட்டு வளமே நாட்டு வளம் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒரு நாட்டு வளம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது என்றால், அந்த நாட்டில் உள்ள நீர் வளம், நிலவளம், தொழில் வளம் ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்படுகின்றது. நீர் வளத்திற்குக் காரணம் மழை. மழையினால் மட்டுமே நீர் வளத்தைப் பெருக்க முடியும். அந்த மழைக்கு அடிப்படைக் கராணம் காடுகள்தான். காடுகள் இல்லையென்றால் நீர் வளம் நாட்டில் இல்லை. காடுகளும் காட்டுயிரிகளும் நிலவளமாகிய மண்வளத்தை மேம்படுத்துகின்றது. நிலமும் நீரும் பெருகவில்லை என்றால் நாட்டின் தொழில் வளம் கிடையாது. எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.

நன்றி.


2. காட்டின் பயன்கள் 

அனைவருக்கும் வணக்கம்!

காட்டின் பயன்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல. அவை பலவாகும். விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே. உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது. மழைவளத்தைப் பெருக்குகின்றது. மண்ணைப் பண்படுத்துகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும். உணவுப்பெருக்கம் ஏற்படும். பருவநிலை சீரடையும். மண்ணரிப்பு  தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கும். புவி - வெப்பமயமாதலைத் தடுக்கும். எனவே காட்டின் பயன் அறிந்து காடுகள் வளர்ப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி.


அறிந்து பயன்படுத்துவோம்.

பால் ஐந்து வகைப்படும்

1. ஆண்பால்

2. பெண்பால்

3. பலர்பால்

4. ஒன்றன்பால் 

5. பலவின்பால்

அஃறிணை 

ஒன்றன்பால் 

ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் (சான்று: கல், பசு)

பலவின்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் (சான்று: மண் புழுக்கள், பசுக்கள் )

உயர்திணை 

ஆண்பால் 

ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் (சான்று: மாணவன், செல்வன்)

பெண்பால் 

ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால் (சான்று: ஆதினி, மாணவி)

பலர்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிப்பது பலர் பால் (சான்று: மாணவர்கள், மக்கள்)


எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக. 

1. மகளிர்  X  ஆடவர் 

2. அரசன்  X  அரசி 

3. பெண்  X ஆண் 

4. மாணவன்  X  மாணவி 

5. சிறுவன்  X  சிறுமி 

6. தோழி  X  தோழன்


படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.



பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக. 

எ.கா : கண்ணகி சிலம்பு அணிந்தான்.

விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள். 

1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.

கோவலன் சிலம்பு விற்கப் போனான். 

2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.

அரசர்கள் நல்லாட்சி செய்தனர். 

3. பசு கன்றை ஈன்றன.

பசு கன்றை ஈன்றது.

4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.

மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 

5. குழலி நடனம் ஆடியது.

குழலி நடனம் ஆடினாள்.


கடிதம் எழுதுக. 

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக. 

நண்பனுக்குக் கடிதம்

23, பெரியார் வீதி, 

சேலம் - 3.

10.06.2020. 

ஆருயிர் நண்பா !

உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம்.நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா? எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூணும் கதைகள் பல சொல்லும். அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம். அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே ! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன். வாழ்க வளமுடன்.

இப்படிக்கு 

உயிர் நண்பன்,

ப. இளங்கதிர். 


உறைமேல் முகவரி: 

பெறுநர் 

ச. கதிரவன், 

34, புதுக் காலனி, 

கரூர் - 3.


மொழியோடு விளையாடு



வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.


1. புதையல் 

2. இயல் 

3. கயல்

4. புயல் 

5. கடல்

6. தையல் 

7. புல் 

8. கல் 

9. இல்லை 

10. இயல்பு


சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க. 


எ.கா : வாழை + காய் - வாழைக்காய் 

1. குருவி + கூடு - குருவிக்கூடு 

2. விளையாட்டு + திடல் - விளையாட்டுத்திடல் 

3. தயிர் + சோறு - தயிர்ச்சோறு 

4. கொய்யா + பழம் - கொய்யாப்பழம் 

5. விளையாட்டு + போட்டி - விளையாட்டுப்போட்டி 

6. அவரை + காய் - அவரைக்காய் 


விடுகதைகளுக்கு விடை எழுதுக. 

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. 

வளைந்த வாலுண்டு; புலி அல்ல 

கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. 

முதுகில் மூன்று கோடுகளை உடையவன். 

நான் யார்?............ 

விடை : அணில் 


2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.

முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். 

இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். 

மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். 

நான் யார்?.. 

விடை : குதிரை 


3. வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல. 

மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல 

தவமிருப்பேன்;  முனிவரல்ல. 

நான் யார்?.........

விடை : கொக்கு


நிற்க அதற்குத் தக...


என் பொறுப்புகள்....

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

2. இயற்கைச் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பேன்.


கலைச்சொல் அறிவோம்

தீவு - Island 

இயற்கை வளம் - Natural Resource 

வன விலங்குகள் - Wild Animals 

வனப் பாதுகாவலர் - Forest Conservator

உவமை - Parable 

காடு - Jungle 

வனவியல் - Forestry 

பல்லுயிர் மண்டலம் - Bio Diversity


இணையத்தில் காண்க

இந்தியாவிலுள்ள வனவிலங்குக் காப்பகங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருக.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு