Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும் | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 5 : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்

உலகப் பெருமந்த நிலை 1929இல் இருந்து ஒரு பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும்.

உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்


உலகப் பெருமந்த நிலை 1929இல் இருந்து ஒரு பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும். மந்தமான பொருளாதார நடவடிக்கைகள், குறிப்பாகத் தொழிலகத்தில் உற்பத்திக் குறைப்பு , கதவடைப்பு, ஊதிய குறைப்பு, வேலையின்மை மற்றும் பட்டினி போன்ற நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றது. வட அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரப் பெருமந்தமானது ஐரோப்பாவையும் உலகின் அனைத்துத் தொழில்துறை மையங்களையும் பாதித்தது. உலகம் அதன் காலனித்துவ ஒழுங்கினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால், அதன் பொருளாதார மண்டலத்தில் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் வளர்ச்சியானது மற்ற பகுதிகளையும் பாதித்தன.

அமெரிக்காவில் வால் தெருவில் (Wall Street) உண்டான (அமெரிக்கப்பங்குச்சந்தை அமைந்துள்ள இடம்) பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது. இது இந்தியாவையும் தாக்கியது. பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெருமந்தம் உற்பத்தித்தொழில், வேளாண் துறைகள் என இரண்டையும் பாதித்தது.தொழில் துறை மையங்களான பம்பாய், கல்கத்தா, கான்பூர், ஐக்கிய மாகாணம், சென்னை ஆகிய இடங்களில் ஊதியக் குறைப்புகள், வேலை முடக்கம் ஆகியவற்றிற்கு எதிராயும் வாழ்க்கை நிலையை மேம்பாடடையச் செய்யக் கோரியும் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. வேளாண் துறையில், சணல் மற்றும் கச்சாப் பருத்தி போன்ற ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் விலைகள் அதலபாதாளத்தில் சரிந்தன. 1929-1930இல் 7.311 கோடியாயிருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 1932-1933இல் 1.132 கோடியாகச் சரிந்தது. எனவே, 1930களில் தோன்றிய கிசான் சபாக்கள் குத்தகைக் /வாடகைக் குறைப்புக்கள், கடன் பிடியிலிருந்து நிவாரணம், ஜமீன்தாரி முறை அகற்றப்படுதல் ஆகியவற்றிற்காகப் போராடியது.

இந்தியத் தொழில்துறைக்குக் கிடைத்த ஒரே நேர்மறைத் தாக்கம் குறைக்கப்பட்ட விலையில் கிடைத்த நிலங்கள் மற்றும் மலிவான ஊதியத்தில் கிடைத்த தொழிலாளர்கள். பிரிட்டனுடனும் பிற முதலாளித்துவ நாடுகளுடனும் ஏற்பட்ட பலவீனமான உறவுகளால் சில இந்திய தொழில்களில் வளர்ச்சியடைந்தன. ஆயினும் உள்ளூர் நுகர்வுக்கு முக்கியத்துவமளித்த தொழில்கள் மட்டுமே செழித்தோங்கியன.

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 5 : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்