Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | முகலாயப் பேரரசு

வரலாறு - முகலாயப் பேரரசு | 11th History : Chapter 14 : The Mughal Empire

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

முகலாயப் பேரரசு

இந்தியாவின் மீது மேற்கு, வடமேற்குத் திசைகளிலிருந்து மகா அலெக்ஸாண்டர் காலம் தொடங்கி நூற்றாண்டுகளின் ஊடாகப் பலமுறை படையெடுப்புகள் நடைபெற்றுள்ளன.

முகலாயப் பேரரசு

 

கற்றல் நோக்கங்கள்

கீழ்கண்டவை பற்றி அறிதல்

முதல் பானிப்பட் போருக்குப் பிறகு இந்தியாவில் முகலாயர் ஆட்சி நிறுவப்பட்டது.

ஹுமாயூனின் திறமையின்மையால் தனது ஆட்சியை நிலைநிறுத்த முடியாதபோது ஷெர்ஷாவின் சூர் வம்ச ஆட்சி ஏற்பட்டதை அறிதல்

ஷெர்ஷாவின் நிர்வாகச் சீர்திருத்தங்கள்

அக்பர் ஆட்சிக் காலத்தில் முகலாய அரசு வலுப்படுத்தப்பட்டது

அக்பரின் மத மற்றும் ரஜபுத்திரக் கொள்கை

ஜஹாங்கீர் ஆட்சியின் முக்கியத்துவம்

கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஷாஜகானின் பங்களிப்பு

ஔரங்கசீப்பின் இராணுவ வெற்றிகள், அவரது அழிவுகரமான ரஜபுத்திர, தக்காணக் கொள்கைகள் மற்றும் மராத்தியர்களுக்கு எதிரான போர்கள்

முகலாயர் ஆட்சியின்போது இலக்கியம், ஓவியம், இசை, கட்டடக்கலை ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி, பக்தி இயக்கம், சூபியிசம், சீக்கியம், கிறித்துவம், இஸ்லாம்; வர்த்தகம், தொழில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி

 


அறிமுகம்

இந்தியாவின் மீது மேற்கு, வடமேற்குத் திசைகளிலிருந்து மகா அலெக்ஸாண்டர் காலம் தொடங்கி நூற்றாண்டுகளின் ஊடாகப் பலமுறை படையெடுப்புகள் நடைபெற்றுள்ளன. வட இந்தியாவின் பல பகுதிகள் இந்தோ - கிரேக்கர்கள், சாகர், குஷாணர், ஆப்கானியர் போன்ற அந்நியர்களால் ஆளப்பட்டுள்ளன. மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்களான முகலாயர் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவினர். அப்பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது. ஆனால் அவர்களை நாம் அந்நிய தேசங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களாகக் கருதவில்லை; மாறாக நம் நாட்டைச் சேர்ந்த அரச வம்சாவளியினராகவே கருதுகிறோம்.

முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இப்பேரரசு 1526இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்த பின் நிறுவப்பட்டது. இவ்வாறு இந்தியாவில், ஒரு புதிய சகாப்தம், ஒரு புதிய பேரரசு தொடங்கி 1526 முதல் 1857 வரை நீடித்தது. முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்களான பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் ஆகியோர் இந்திய வரலாற்றில் தங்கள் தடங்களைப் பதித்தனர். 1707இல் ஔரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து பேரரசு வீழ்ச்சியடைந்தது. என்றாலும் 1707 முதல் 1857 வரை முகலாயர் அரசு பெயரளவுக்கு ஓர் அரசாக இயங்கி வந்தது. ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1857ஆம் ஆண்டு பெரும்கிளர்ச்சிக்குப் பின் அரசியல் அதிகாரம் ஆங்கிலேய அரசியாரின் கைவசமானபோது ஆட்சி ஆங்கிலேயரின் கைகளுக்குச் சென்றது. முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை யிலும், காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரையிலும் பரந்து விரிந்திருந்தது. இந்தியா முழுவதிலும் மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினர். முகலாயர்கள், குறிப்பாக அக்பர், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒரே நாட்டினராக ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுத் தேசிய அடையாள அரசியலை உருவாக்கினார். மேலும் இந்தியாவைச் செழுமைப்படுத்திய மகத்தான கலை, கட்டடக்கலை, இலக்கிய, பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றனர்.   

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு