பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாற்றை நோக்கி | 5th Social Science : Term 1 Unit 2 : Towards History

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : வரலாற்றை நோக்கி

வரலாற்றை நோக்கி

பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர். அவர்கள் மாமிசம் உட்பட அனைத்து உணவுப் பொருள்களையும் சமைக்காமல் உண்டனர். தொடக்கத்தில் நெருப்பை உருவாக்கும் முறைகள் அவர்களுக்குத் தெரியவில்லை.

அலகு 2

வரலாற்றை நோக்கி


 

கற்றல் நோக்கங்கள்

மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக:

கற்காலம் பற்றி அறிந்துகொள்வர்.

மனித பரிணாமத்தின் தன்மை பற்றித் தெரிந்துகொள்வர்.

மனிதர்களின் நாடோடி வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்வர்.


 

கற்காலம்

பழங்காலத்தில் மனிதர்கள் உலோகங்களை அறிந்திருக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின் மனிதர்கள் உலோகங்களைக் கண்டறிந்தனர். இன்றைய நமது வாழ்க்கை பண்டைய மக்களின் அன்பளிப்பேயாகும். இக்காலகட்டத்தில் மனிதர்கள் எழுத்து வடிவங்களை அறிந்திருக்கவில்லை. கற்காலம் என்பது கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலமாகும்.

 

மனித பரிணாமத்தின் தன்மை

பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர். அவர்கள் மாமிசம் உட்பட அனைத்து உணவுப் பொருள்களையும் சமைக்காமல் உண்டனர். தொடக்கத்தில் நெருப்பை உருவாக்கும் முறைகள் அவர்களுக்குத் தெரியவில்லை. வேட்டையாடுதலின் போது நாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. நாய்கள் குரைத்தபோது காட்டு விலங்குகள் ஓடின. எனவே மனிதர்கள் நாயை முதலில் தங்கள் செல்லப் பிராணியாக வளர்த்தனர். அவர்கள் எங்கு சென்றாலும் அதை அழைத்துச் சென்றனர்.


பின்னர் அவர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கினர். கால்நடைகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஆற்றுப் பகுதியில் சில தானியங்கள் வளர்வதை அவர்கள் கவனித்தனர். அவற்றை சாப்பிட்டு, மிகவும் சுவையாக இருந்ததை கண்டுபிடித்தனர். சிதறிக்கிடந்த தானியங்கள் பறவைகளால் மட்டுமே உண்ணப்பட்டன என்பதை அவர்கள் கவனித்தனர். சூரிய ஒளி மற்றும் மழையின் உதவியால் தானியங்கள் வளர்வதை அவர்கள் கண்டறிந்தனர். இதன்மூலம் வேளாண்மை குறித்து தெரிந்து கொண்டனர்.

கற்கால மனிதர்கள் காட்டுத்தீயைக் கண்டனர் முதலில் நெருப்பைப் பார்த்து பயந்தார்கள். அவர்கள் நெருப்பினால் இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்டனர். நல்ல சுவை கொண்டதாக அது இருந்தது. மேலும், இரண்டு கற்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டதால் தீப்பொறி உருவானதை அவர்கள் கவனித்தனர். அதன் பின்னர் அவர்கள் நெருப்பை உருவாக்கி சமைத்து உண்ண ஆரம்பித்தனர்.

 • பழங்கால மனிதன் குவார்ட்சைட் எனப்படும் கரடுமுரடான ஒரு வகை கல்லைக்கொண்டு, கருவிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்தான்.

 • சிக்கிமுக்கி கற்கள் எனப்படும் ஒரு வகை கற்களைக் கொண்டு நெருப்பை உருவாக்கினான்.

 

நாடோடி வாழ்க்கை

பழங்கால மனிதர்களுக்குப் பயிரிடுதல் பற்றித் தெரியாது. உணவு தேடி எல்லா நிலப்பரப்பிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் கிடைத்ததை சாப்பிட்டு, இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட தண்ணீரைக் குடித்தார்கள். இம்முறையிலான வாழ்க்கை நாடோடி வாழ்க்கை என்று அழைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்கள், இலைகள், மரப்பட்டைகள் ஆகியவற்றை ஆடையாக அணிந்தனர். அவர்கள் குகைகளிலும், பெரிய மரங்களின் பொந்துகளிலும் வாழ்ந்தனர்.


கற்கள் கூர்மையாக்கப்பட்டு கருவியாக பயன்படுத்தப்படன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழிக்க உதவின.


எலும்புகள், கொம்புகள், கற்கள், விலங்குகளின் தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கால கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் இந்த வளர்ச்சி நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.







செயல்பாடு நாம் செய்வோம்

1. கற்கால மனிதர்களால் உண்ணப்பட்ட உணவு எது?

-------------------------------------------

2. கற்கால மனிதர்கள் குகைகளில் ஏன் வாழ்ந்தனர்?

----------------------------------------------------

3. மாமிசத்தை சமைக்காமல் ஏன் உண்டனர்?

கற்கால மனிதர்கள் விலங்குகளிடயிருந்து பாதுகாப்பாக இருப்ப தற்காக, கருவிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தினர்

அவர்கள் இரவில், வழி கண்டறிய தீப்பந்தங்களைப் பயன்படுத்தினர்.

அவர்கள் வசித்த குகைகளின் 'சுவர்களில், தாங்கள் கண்டவற்றை ஓவியங்களாக வரைந்தனர்.

 

கற்சக்கரங்கள்

மலையில் இருந்து கற்கள் உருண்டு விழும்போது அவைகள் உருண்டை வடிவம் பெற்றன. மனிதர்கள் அவற்றைக் கவனித்தபோது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் அது கல்லினால் செய்யப்பட்டு பின்னர் மரத்தால் செய்யப்பட்டது. மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.


 

நாம் அறிந்து கொள்வோம்.

ஆவணங்கள் எழுதப்பட்ட காலம் வரலாற்றுக் காலம் என்று அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வியல் முறைகள், நிகழ்வுகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலை, கட்டடக்கலை, இலக்கியம் முதலியவைகளை அறிந்து கொள்ள இந்த ஆவணங்கள் நமக்கு உதவுகின்றன.

 

மண்பாண்டம்

மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்று மண்பாண்டங்கள் ஆகும். சுடப்பட்ட பானை உறுதியாகவும் அழகாகவும் இருந்தது. கற்கால மக்கள் தமக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் தாமாகவே செய்து கொண்டனர்

கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளின் கூரைகள் குச்சிகள் மற்றும் வைக்கோல்கள் கொண்டு வேயப்பட்டன. பல கண்டுபிடிப்புகளுக்கு பிறகு மனிதர்கள் நிலையாக ஓரிடத்தில் வாழத் தொடங்கினர்.


 

வேளாண்மை

மனிதர்களின் வாழ்வில் வேளாண்மை என்பது ஒரு முக்கியமான செயல்பாடாகும். அவர்கள் பயிர் சாகுபடி செய்யத் தொடங்கினர் விதைகளை விதைத்து அறுவடை செய்தனர் ஆற்றின் அருகில் பயிர்கள் நன்கு வளர்ந்ததால், ஆற்றங்கரையோரமாக வாழ்வது வசதியாக இருந்தது.


 

நாம் அறிந்து கொள்வோம்.

அருங்காட்சியகம் என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய தொல்கைவினைப் பொருள்கள் பாதுகாக்கப்படும் இடம். அவை பழங்கால மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எனவே, கடந்த காலத்தின் எஞ்சியப்பொருள்களைப் பாதுகாப்பது முக்கியமாகும்.

 

மனிதனின் வாழ்க்கை முறை மாற்றங்கள்


இறந்தவர்களின் உடல்கள் பானைகளில் வைக்கப்பட்டு, பூமிக்குள் புதைக்கப்பட்டன. அது முதுமக்கள்தாழிகள் என அழைக்கப்பட்டன.


புதிய கற்காலம்

புதிய கற்காலத்தின் இறுதியில் செம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் கல்லும் செம்பும் பயன்படுத்தப்பட்டன. இக்காலம் செம்புக் காலம் என்று அழைக்கப்பட்டது. செம்பு, துத்தநாகம், வெள்ளீயம் ஆகியவை ஒன்றாக கலந்து வெண்கலம் தயாரிக்கப்ப ட்டது. தயாரிக்கப்பட்டது. வெண்கலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டக் காலம் வெண்கலக் காலம் என்றழைக்கப்பட்டது.

 

இரும்புக் காலம்

கண்டுபிடித்து இரும்புக் கருவிகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த காலம் இரும்புக் காலம் என்று அழைக்கப்பட்டது. இந்த காலத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், விவசாயக் கருவிகள் போன்றவை இரும்பைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.

 

செயல்பாடு நாம் செய்வோம்

உங்கள் வீட்டில் காணப்படும் சில இரும்புக் கருவிகளின் பெயர்களைக் கூறுக.

வெட்டரிவாள், மண்வெட்டி

 

தொல்பொருள் அகழ்வாராய்ச்சி

நாணயங்கள், உடைந்த பானைத்துண்டுகள் (Potsherds), உலோகப் பொருள்கள் போன்றவை தொல்பொருள் அகழ்வாராய்ச்சி (Excavation) நடைபெறும் இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. இத்தகைய பொருள்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. தமிழகத்தில், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி ஆகிய இடங்களில், கடந்த காலங்களில் மக்கள் பயன்படுத்திய பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டன. தற்பொழுதும் இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

நீங்கள் பழமையான வரலாற்று சிறப்புடைய பொருள்களை கண்டெடுத்தால் அதனைச் சேகரித்து, சேமிக்க முயற்சி செய்ய வேண்டும்.

 

நாம் அறிந்து கொள்வோம்.

ஒரு அரசனின் ஆட்சிக்காலம், மக்கள், சமுதாய நிலை பற்றி பாறைகளிலும், சுவர்களிலும் பொறிக்கப்பட்டவை, கல்வெட்டுகள் என்று அழை க்கப்படுகின்றன. பொதுவாக இவை கோவில் சுவர்களில் காணப்படுகின்றன.

 

நாணயவியல் என்றால் என்ன?

 

கலைச்சொற்கள்

தொல்கைவினைப் பொருள்கள் : Artefacts

அகழ்வாராய்ச்சி : Excavation

உடைந்த பானைத்துண்டுகள் : Potsherds

 

மீள்பார்வை

• கற்காலம் என்பது கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலமாகும்.

• கற்காலம் பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : வரலாற்றை நோக்கி