தமிழ்நாடு – மானுடப் புவியியல் - கால்நடை வளர்ப்பு | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு என்பது ஊரக மக்களின் சமூக பொருளாதாரத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும்.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு என்பது ஊரக மக்களின் சமூக பொருளாதாரத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும்.

வெள்ளாடுகள்

இந்தியாவில் வெள்ளாடுகள் ‘ஏழை மக்களின் பசு’ என்றழைக்கப்படுகிறது. இது ஒரு புன்செய் வேளாண் அமைப்பின் மிக முக்கிய அங்கமாகும். கால்நடை வகைகளான பசு மற்றும் எருமை வளர்ப்பிற்கு ஏற்பில்லா இடங்களான நில விளிம்புப் பகுதிகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த நிலத்தோற்றப் பகுதிகளில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு மாற்றாக உள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டப்படுவதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் வெள்ளாடு வளர்ப்பினை மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது

செம்மறியாடு

செம்மறியாடுகள், கம்பளி, இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் போன்ற பல்வேறு பயனுள்ள பொருள்களை அளிப்பதால் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள், வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் உள்ள ஊரகப் பொருளாதாரத்தில் இவை முக்கிய பங்காற்றுகிறது. செம்மறியாடுகள் மற்றும் அவற்றின் உரோமம் அதன் உடைமையாளர்களுக்கு முக்கியப் வருவாய் ஆதாரமாக உள்ளன.

மீன் பிடித்தல்

தமிழ்நாடு ஒரு கடற்கரை மாநிலமாதலால் மீன்பிடித்தல் இங்கு முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். உள்நாட்டு மீன் பிடித்தல் என்பது பரந்த அளவில் காணப்படும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் கணிசமான அளவு நடைபெறுகின்றது.

கடல் மீன் பிடிப்பு

தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் 1,076 கிலோமீட்டராகும். ஏறத்தாழ 41,412 சதுரகிலோமீட்டர் பரப்பளவு 'கண்டத்திட்டு’ உள்ளதால் கடற்கரை மீன்பிடிப்புக்கு சாதகமாக உள்ளது. தமிழ்நாடு கடல் மீன் உற்பத்தியில் முதன்மையான மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. மீன்பிடித்தலுக்கு பெரிய மற்றும் இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் ‘கடலோர மீன்பிடிப்பு’ என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து பொதுவாக 20 முதல் 30 மைல்கள் தூரம் வரையிலும், 100 அல்லது 1000க்கும் மேற்பட்ட அடிகள் ஆழத்தில் மீன்பிடித்தல் நடக்கிறது. இது ‘ஆழ்கடல் மீன்பிடிப்பு’ என அழைக்கப்படுகிறது. சுறா, பறவை மீன், சங்கு மீன், கெளுத்தி, வெள்ளி வயிறு மீன் போன்ற மீன் வகைகள் மற்றும் நண்டு வகைகள் இங்குப் பிடிக்கப்படுகின்றன. சென்னை , கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் கடல் மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 40% சதவிகிதம் பங்களிப்பைத் தருகின்றன. கடற்கரையின் அமைவிடம் இப்பகுதிகளில் மீன் பிடித்தலுக்கு சாதகமாக உள்ளன.

உள்நாட்டு மீன்பிடிப்பு

ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது. சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது. மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மீன் வளத்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில உள்நாட்டு மீன் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் 10 சதவிகித உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா 9 சதவிகிதம் உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன. மாநிலப் பொருளாதாரத்தில் மீன் பிடித் துறையானது 1.25% சதவிகிதம் பங்களிப்பைச் செய்கிறது.


10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்