Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: அக்கறை

கல்யாண்ஜி | இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அக்கறை | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

கவிதைப்பேழை: அக்கறை

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : கவிதைப்பேழை: அக்கறை - கல்யாண்ஜி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம் – கூ

கவிதைப் பேழை

அக்கறை

- கல்யாண்ஜி



நுழையும்முன்

உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார்.அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள். அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது  எனலாம். புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன. பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.



சைக்கிளில் வந்த 

தக்காளிக் கூடை சரிந்து 

முக்கால் சிவப்பில் உருண்டது 

அனைத்துத் திசைகளிலும் பழங்கள் 

தலைக்கு மேலே 

வேலை இருப்பதாய்க் 

கடந்தும் நடந்தும் 

அனைவரும் போயினர் 

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள் 

மீதான அக்கறை*


இலக்கணக் குறிப்பு

உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்

சரிந்து - வினையெச்சம்

அனைவரும் - முற்றும்மை.

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து = சரி + த்(ந்) + த் + உ;

சரி - பகுதி; த் --சந்தி (ந் ஆனது விகாரம்); 

த் - இறந்தகால இடை நிலை; 

உ - வினையெச்ச விகுதி.


நூல் வெளி

கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்; சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர். வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில. இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 'சில இறகுகள் சில பறவைகள்' என்ற பெயரில் வெளியானது. கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள். ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே