Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: புலி தங்கிய குகை

காவற்பெண்டு | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புலி தங்கிய குகை | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

கவிதைப்பேழை: புலி தங்கிய குகை

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : கவிதைப்பேழை: புலி தங்கிய குகை - காவற்பெண்டு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கவிதைப்பேழை 

புலி தங்கிய குகை


நுழையும்முன்

தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம்.

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் 

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் 

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் 

புலிசேர்ந்து போகிய கல்அளை போல 

ஈன்ற வயிறோ இதுவே 

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே*

--காவற்பெண்டு


கவிநடை உரை 


எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று 

என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே

அவனிருக்கும் இடம் யானறியேன்; 

புலி தங்கிச் சென்ற குகை போல 

அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது; 

ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!


சொல்லும் பொருளும் 

சிற்றில் சிறு வீடு

கல் அளை கற்குகை

யாண்டு எங்கே 

ஈன்ற வயிறு பெற்றெடுத்த வயிறு 


பாடலின் பொருள்

(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, 'அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?' என்று கேட்டாள்.)

'சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ "உன் மகன் எங்கே?" என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.


நூல் வெளி 

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது

புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு