Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம்

பாடநூல் ஆசிரியர் குழு | பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்

கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம் : கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம் - பாடநூல் ஆசிரியர் குழு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கவிதைப்பேழை

அறிவியலால் ஆள்வோம்


 

நுழையும்முன்

அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில், விண்ணில், கடலில், காற்றில் என எங்கும் ஆய்வுகள் நிகழ்கின்றன. மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர் கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள்!

.

ஆழக் கடலின் அடியில் மூழ்கி

ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்

நீல வானின் மேலே பறந்து

நிலவில் வாழ நினைக்கின்றான்

 

செயற்கைக் கோளை விண்ணில் ஏவி

செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்

இயற்கை வளமும் புயலும் மழையும்

எங்கே என்று உரைக்கின்றான்

 

எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்

எந்திர மனிதனைப் படைக்கின்றான்

இணைய வலையால் உலகம் முழுமையும்

உள்ளங் கையில் கொடுக்கின்றான்

 

உறுப்பை மாத்தும் மருத்துவம் கண்டு

உடலும் உயிரும் காக்கின்றான்

அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து

அனைத்தும் செய்து பார்க்கின்றான்

 

நாளை மனிதன் கோள்களில் எல்லாம்

நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்

வேளை தோறும் பயணம் செய்ய

விண்வெளிப் பாதை அமைத்திடுவான்.

- பாடநூல் ஆசிரியர் குழு.

 

பாடலின் பொருள்

மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான். நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.

வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான்.

எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான். இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.

பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான். அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறான்.

நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்த்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.

வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

- பாரதியார்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்